Headlines
மணவாளக்குறிச்சியில் உயிர்பலி வாங்க துடிக்கும் மின் கம்பம்

மணவாளக்குறிச்சியில் உயிர்பலி வாங்க துடிக்கும் மின் கம்பம்

29-09-2016
மணவாளக்குறிச்சி, சேரமங்கலத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, அம்மாண்டிவிளை, திருநயினார் குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. திருநயினார்குறிச்சி பகுதிக்கு படர்நிலம், வடக்கம்பாகம் வழியாக மின் பாதை செல்கிறது. இதற்காக வடக்கன் பாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
சாலையோரம் சாய்ந்து நிற்கும் இக்கம்பத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். மணவாளக்குறிச்சியில் உள்ள மேற்கு கடற்கரை சாலை கடந்த சில நாட்களாக குண்டும்,குழியுமாக காணப்படுவதால் மணவாளக்குறிச்சியிலிருந்து திருநயினார்குறிச்சி, வெள்ளிச்சந்தை, வெள்ளிமலை, மூங்கில்விளை ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் வடக்கன்பாகம் சாலை வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும் அங்கு வீடுகளும் அதிகம் உள்ளது. இதனால் இந்த சாலையில் மக்கள் கூட்டம் எப்போதும் மிகுந்திருக்கும். ஆபத்தான இந்த மின் கம்பத்தை மாற்ற வலியுறுத்தி பொது மக்கள் மணவாளக்குறிச்சி மின் வாரிய அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புகார் செய்தும் தொடர்ந்து மின் வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. எனவே பொது மக்கள் எப்போதும் அதிகமாக நடமாடும் இந்த சாலையில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தை மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: